கரூர் துயர சம்பவத்திற்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்த பிரதமர் மோடி, தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது: "தமிழ்நாட்டில் உள்ள கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் தெரிவித்திருக்கிறார்.
கரூரில் நடந்த துயர சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்காது. அதை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார்.