
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச் சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (பிப். 15) காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர்கள் எ. வ வேலு, மா. சுப்பிரமணியன் மற்றும் திமுக தலைவர்கள் பலர் உடனிருந்தனர். அதன்பின், அப்பாலத்தில் சென்று அவர் பார்வையிட்டார்.
ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து தொடங்குகிறது. இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் ‘டி’ வடிவலானது. இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.