2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடர் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.