
ஜாய் கிரிசில்டாவின் விஷயத்தில், டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு தன் மகன் என்று ஒப்புக்கொண்ட நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பல முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அப்போது 7 மாத கர்ப்பமாக இருந்த அவரை, கருக் கலைப்பிற்கு ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி அடித்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இந்தப் புகார் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து இருந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் ஜாய் கிரிசில்டா வெளியிட்டார்.
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடப்பு ஆண்டு, மார்ச் 5ஆம் தேதி, ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியது.
டி.என்.ஏ. பரிசோதனையின் முடிவுகள் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியானது. இதில் மாதம்பட்டி ரங்கராஜ்யுடைய குழந்தைதான் என்று உறுதியானது.
இதை தொடர்ந்து, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
“எனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.
இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.