
நாட்டிலேயே நேற்று அதிக வெப்பம் பதிவான பகுதிகளில், மதுரை முதலிடத்தில் உள்ளது.
நேற்று மதுரை விமான நிலைய வானிலை ஆய்வு மையத்தில் 42.5 டிகிரி செல்சியஸ் அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால், இந்தியாவிலேயே அதிக வெப்பநிலை பதிவான பகுதியாக நேற்று மதுரை இருந்துள்ளது. இந்த வெப்பநிலை அப்பகுதியில் பதிவாகும் வழக்கமான வெப்பநிலையைவிட 5.5 டிகிரி செல்சியஸ் அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மதுரை, வேலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், தருமபுரி உட்பட்ட பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை பலவீனமடைதல், மேக மூட்டம் குறைவு, உலர்ந்த காற்றின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துள்ளது என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற வெளிப் பயணங்களைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.