பாகிஸ்தானில் தமிழக மீனவர்கள்- வெளியுறவு அமைச்சர் பதில் கடிதம்!
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரிலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3-1-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அந்த மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் 6ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் 'ஸ்ரீ வ்ராஜ் பூமி' (பதிவு எண்.IND-GJ-25-MM-3458) மற்றும் 'மந்தீப்' (பதிவு எண்.IND-GJ-25-MM-1582) பெயர் கொண்ட படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள்
3-1-2024 அன்று சிறைபிடித்ததை அறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றுள்ளதாகவும், மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும், மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,
இந்திய தூதரகம் இதைத் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தன் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.