3 ஆசிரியர் போராட்டங்கள்- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

3 ஆசிரியர் போராட்டங்கள்- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்றுவரும் ஆசிரியர் போராட்டங்கள் நீடிக்கும் நிலையில், தலைமைச்செயலகத்தில் இன்று மாலை துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்காத இடைநிலை ஆசிரியர் கோரிக்கை தொடர்பாக, மூவர் குழு அமைக்கப்படும் என்றும் மூன்று மாதங்களில் இக்குழுவின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, முதலமைச்சரின் முடிவுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பகுதிநேர ஊழியர்களாக இருக்கும் சிறப்பு ஆசிரியர்களின் கோரிக்கைக்குப் பதிலாக, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மகேஸ் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பணிக்காகக் காத்திருந்துவரும் போராட்டக்காரர்கள் நியமனக் கோரிக்கை எழுப்பும்நிலையில், அமைச்சர், அவர்களின் காத்திருக்கும் வயதை பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும் மற்ற பிரிவினருக்கு 58ஆகவும் அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.

போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

வேறு சில ஊழியர் தரப்பினர் குறித்து அறிவிப்பு வெளியிட்ட அவரிடம், கோரிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் முழுமையாக பதிலளிக்காமல் புறப்பட்டார்.

அமைச்சரின் அறிவிப்புக்கு போராடிவரும் மூன்று வகை ஆசிரியர்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com