
தலைநகர் சென்னையில் பன்னோக்கு சுகாதாரப் பணியாளர்கள் உட்பட சில பணியாளர்கள் தரப்பினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் நிரந்தரக் கோரிக்கையை நிராகரித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இப்போதெல்லாம் தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷனாகிவிட்டது என்று கடுமையாகச் சாடியும் குறிப்பிட்டார்.
அவருடைய பேச்சு சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து பல்வேறு தரப்பினர் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று, அவர் தன்னுடைய பேச்சு குறித்து சமூக ஊடகப் பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு சில போராட்டங்கள் பற்றி கருத்துக் கூற நேரிடும் போது- நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான். ஏனென்றால் நானே அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்தவன் தான். அதிலும் குறிப்பாக - அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு ஊழியர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவன். அதனால் எனது கருத்தினை அரசு ஊழியர்கள் யாரும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம்.” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.