கண்டனம், எதிர்ப்பு... சாந்தமாகப் பேசி, விளக்கம் அளித்த அமைச்சர் மரிய வில்சன்!

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்
Published on

தமிழில் பேசுவது தொடர்பாக சட்டப்பேரவையில்  நேற்றுமுன்தினம் அமைச்சர் மரிய வில்சன் சர்ச்சைக்கு ஆளாகினார். குறிப்பாக, அவர் மரபை மீறி ஆவேசமாகக் கத்தியதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

பல்வேறு தரப்பினரும் அவர் மதத்தை இழுத்துப் பேசியதற்கு கடுமையாகக் கண்டனமும் தெரிவித்திருந்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் இன்று தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளிக்கத் தொடங்கிய மரிய வில்சன், அவரா இவர் என்கிற அளவுக்கு, இரண்டு நாள்களுக்குப் பிறகு மிகவும் சாந்தமாகப் பேசினார்.

மேலும், தி.மு.க.வின் தரப்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவாரூர் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோரைக் குறிப்பிட்டு, தன்னுடைய மாமனார் ஜேப்பியாரையும் பற்றிக் குறிப்பிட்டு, அனுதாபம் தேடும் தொனியில் இளக்கமாகப் பேசினார்.

அத்துடன், தான் பிறந்தது புதுச்சேரி என்றும் வளர்ந்தது திருவாரூர் என்றும், படித்தது சென்னை என்றும், அடைக்கலம் ஆனது வடசென்னை என்றும் விவரித்த அவர், தனக்கு தமிழ் கொஞ்சம் பிரச்னைதான் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டார். அவருடைய இந்தப் பேச்சு, முந்தைய அவரின் நடத்தைக்கு வருத்தம் தெரிவிப்பதைப் போல ஒரு விளக்கமாக அமைந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com