மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி

’பதில் சொல்லுங்க மோடி’- மு.க. ஸ்டாலின் வைக்கும் 3 கேள்விகள்!

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தி.மு.க. மீது பிரதமர் முதல் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைவரை சரமாரியாகக் குறைகளைக் கூறிவருகின்றனர். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல் தி.மு.க. தரப்பு தவிர்த்துவரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிர்க்கேள்விகளை வைத்துள்ளார். 

மு.க. ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிடப்பட்டிருப்பதாவது:

“ பதில் சொல்லுங்க மோடி !.

பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...

பதில் சொல்லுங்க மோடி !.” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com