வேலூர் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்
வேலூர் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்

தமிழக வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது பா.ஜ.க.- மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

”இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி - தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி - தமிழினத்தின் வளர்ச்சி - பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை - அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் முப்பெரும் விழாவில் அவர் ஆற்றிய உரையில், கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் பலவற்றையும் குறிப்பிட்டார். விருது பெற்றவர்களையும் தனித்தனியாகப் பாராட்டினார்.

அவர் பேச்சின் குறிப்பிடத்தக்க பகுதி:

” ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான கல்வி – சுகாதாரம் - குடிநீர் - சாலை வசதிகள் – கடன்கள் - மானியங்கள் – பெண்கள் முன்னேற்றம் – விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் – இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை.

ஒவ்வொரு மாநில அரசும் – அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை – என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை – தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.

நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

வேலூர் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்
வேலூர் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்

பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

சரி என்ன சாதனை இந்த ஒன்பது வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா?

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு.

இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை.

நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர முடியும்.” என்றார் ஸ்டாலின்.

logo
Andhimazhai
www.andhimazhai.com