
தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தொடர்பான இடங்களில் இலஞ்ச ஒழிப்புச் சோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
” உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே தி.மு.க. முதன்மைச் செயலாளர் சகோதரர் கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிவிலகச் செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையைக்கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
கே.என்.நேருவும் கட்சியும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.