விவசாய பாதிப்பைப் பேசத் துணிச்சல் இல்லாத எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் சாடல்

விவசாய பாதிப்பைப் பேசத் துணிச்சல் இல்லாத எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் சாடல்
Published on

தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்கத் துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறைகூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் பேச்சு விவரம்:

” ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி.யால் வரி உரிமை இல்லை – நமக்கு வரவேண்டிய நிதியும் வழங்கவில்லை - குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் - தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள் - துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம்! இதுதான், திராவிட மாடல்!

இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களை கூச செய்கிறது… வயிறு எறிகிறது. அதனால் தான், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள்.  பொறுப்புள்ள, ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, அத்தனை வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள்… தமிழ்நாட்டு மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதுமூலமாக, வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது? தமிழ்நாட்டைப் பற்றி இப்படி பேசுகிறார்களே ஏன் என்று, வடமாநில யு-டியூபர்கள் தேடி பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை - சாதனை திட்டங்களை - பொருளாதார வளர்ச்சியை  தெரிந்து கொண்டு, நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள்! வளர்ச்சி தொடர்பான எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இதே திருவண்ணாமலையில் இருந்துதான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கின்ற பெயரில், உங்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களில் தீர்த்து வைக்கின்ற பயணத்தைத் தொடங்கினேன்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளே அதற்கென்று ஒரு தனித்துறையை ஏற்படுத்தி, அதற்கென்று ஒரு அதிகாரியை நியமித்தேன். வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் பாராட்டும் ஆட்சியை நடத்துவேன் என்று அன்றைக்கு நான் வாக்குறுதி அளித்தேன். அதை நான் செய்திருக்கிறேன். அதை செய்திருக்கிறேனா இல்லையா? கேட்கவில்லை, சத்தமாக சொல்லுங்கள் – நீங்கள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில், பலர் போடுகின்ற பதிவுகளிலும், கமெண்ட்ஸ்-லும் நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், “நான் தி.மு.க. ஆதரவாளர் இல்லைதான். ஆனாலும், நான் முதல்வன் உண்மையாவே இந்த ஆட்சியின் சிறந்த திட்டம்.  இதை பாராட்டாமல் இருக்க முடியாது” என்று ஒரு கமெண்ட் வருகிறது.

அதேபோல இன்னொருத்தர், என்ன சொல்லியிருந்தார் என்றால், “நான் எப்போதுமே தி.மு.க.வுக்கு வாக்களித்தது இல்லை. ஆனால், கல்வித்துறையை பொறுத்தவரைக்கும், கடந்த 4 ஆண்டுகளில், பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்.  நிறைய சாதனைகளை செய்கிறார்கள். காலை உணவுத் திட்டம் போன்று ஒரு திட்டம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரவில்லை. இன்னும் எத்தனை ஆண்டு ஆகும் என்று தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.

மாநில உரிமையை நாம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைப் பற்றியும் நிறைய பேர் பாராட்டி எழுதி இருக்கிறார்கள். ஏன், “தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமை குறையும் -  தி.மு.க. அரசு தான் இந்தியா முழுவதும் தலைவர்களை ஒன்றுதிரட்டி போராடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

இப்படி தி.மு.க.வுக்கு இதுவரை வாக்களிக்காத மக்களிடம்கூட நல்ல பெயரை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி எடுத்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதற்கு அப்படியே தலைகீழாக நடக்கிறது. பா.ஜ.க. ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசைக் கழுவி ஊத்துகிறார்கள். ‘எத்தனால்’ கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பா.ஜ.க. அரசுகள் கட்டுகின்ற – கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாட்களிலேயே இடிந்து விழுகிறது!

தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க.காரங்களே இப்போது இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

ஒன்றிய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை.  எந்த விமர்சனத்தையும் நியாயத்துடன் பார்ப்பது இல்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் - திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் அதிகமாக இருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம்! ஏன், விவசாயிகள் நிறைந்திருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம்! ஆரணி அரிசி என்றால் அவ்வளவு தரமாக இருக்கும். அதனால், மற்ற யாரையும் விட உங்களுக்குத்தான் நூறு நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று மிகவும் நன்றாக தெரியும்.  அந்தத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் பெரிய சாதனையை படைத்தது. ஆனால், இப்போது பா.ஜ.க. அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டார்கள். 

கடந்த 10 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சிதைத்துவிட்டு வந்த இந்த திட்டத்தை, இப்போது மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கிறார்களா என்றால், இல்லை. தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் கட்சியும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.  

இப்படியாக, ஒன்றிய பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் - அவர்களுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க. அடிமைகளும் - நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்துக்காக அவர் வெளியிட்ட ஆறு அறிவிப்புகள்:

முதல் அறிவிப்பு –

இந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேத்துப்பட்டு வட்டம், ஏந்தல் கிராமத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
37 ஏக்கரில், புது சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - 

கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மூன்றாவது அறிவிப்பு –

புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்படும்.

நான்காவது அறிவிப்பு –

வந்தவாசி வட்டம் கீழ்-சீசமங்கலம் கிராமத்தில், 2.02 எக்டேர் பரப்பில் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய வகையில், புதிய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் கீழ் சீசமங்கலம் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய அனைத்து கிராம விவசாயிகளும் பயனடைய இருக்கிறார்கள்.

ஐந்தாவது அறிவிப்பு -

வேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்கள்,  தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான இடுபொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துச் சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில்  பெற்றுப் பயனடையக்கூடிய விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் மழையூரில்,
3 கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு -

திருவண்ணாமலை மாவட்டம், அத்தியேந்தலில், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களின் உயர்விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட - தரமான விதைகளை விவசாயிகளுக்கு காலத்தே வழங்கிட, 250 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட, சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com