
மறைந்த ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.
மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் தூய்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போனவர். சினிமா மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் எனக்கு நிறைய வழிகாட்டினார். ராகவேந்திரா மண்டபத்தைக் கட்ட அவர்தான் காரணம்.
அவர் தயாரித்த சிவாஜி திரைப்படம் அரசியல்வாதிகளுக்கு எதிரான படமாகவே திரைக்கு வந்தது. ஆனாலும், அப்படத்தை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பாராட்டினார். அந்தளவுக்கு அனைவரிடமும் நல்ல உறவில் இருந்தார்.
இன்றைய நிகழ்விலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் பணிகளுக்கு இடையே கலந்துகொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடிகளும் விலை மதிப்பானவை. இங்கு வந்ததால் அவருக்கு 100 ஓட்டு அதிகமாக கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் முதல்வர் கலந்துகொண்டது அவரின் உயரிய பண்பைக் குறிக்கிறது. இது, ஏவிஎம் சரவணன் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு.” எனக் கூறியுள்ளார்.