ராமதாஸ்
ராமதாஸ்

மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி! - ராமதாஸ்

தேர்தலில் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 400-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - பா.ம.க கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடமிருந்து போராடிப் பெறுவோம். தமிழகம் முன்னேறப் பாடுபடுவோம்.

தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்று, வருவாய் சான்று உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆனால், போதுமானதல்ல.

இதையே சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்ற வேண்டும். சட்டமாக இயற்றப்பட்டால், பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தவுள்ளது.

பிரதமர் மோடி தமிழர்களை எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. ஒடிசாவில் பிரசாரம் செய்தபோது அம்மாநிலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியை மறைமுகமாக குறிப்பிட்டு சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தனிநபரை பற்றி கூறிய கருத்து எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் அவமதிப்பு செய்வதாகும். அரசியல் செய்யவே தி.மு.க. இப்படி குற்றச்சாட்டு கூறுகிறது.” இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com