“என்னை நீக்கியது செல்லாது…!”அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பேட்டி!

“என்னை நீக்கியது செல்லாது…!”அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பேட்டி!

”என்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது” என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக குற்றச்சாட்டு கூறிய, சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வி.ராஜு நேற்று அ.தி.மு.க.விலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”என்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது. கட்சியின் சட்ட திட்டங்களை தெரியாமல் கூட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.

கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க பொது குழு உறுப்பினரான நான் கையெழுத்து போட்டு உள்ளேன். பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை பணத்தோடு வரும் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே சந்திக்க முடிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட்டதற்கு தாம் இப்போது வெட்கப்படுகிறேன்.

300 சதுர அடி சொத்து இருந்த சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடலசம் தற்போது பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து அ.தி.மு.க.வை ஏமாற்றி வருவது தொடர்பாக பொது செயலாளரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நான் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். அது தெரியாமல் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி உள்ளார்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com