மாணிக்கம் தாகூருக்கு நயினார் பதிலடி!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் அறிக்கை வாதம் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை :

”தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே,

நேற்று நான் தங்களிடம் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலே கூறாமல், இன்று மீண்டும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பாஜக மீதும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறீர்கள். "தேசம் முதலில்" என்ற உன்னதக் கொள்கையை முன்னிறுத்திச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மீது 'துவேஷ இயக்கம்' என்று அவதூறு வீசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.

"நயினார் அண்ணன் மனதளவில் ஆர்.எஸ்.எஸ். இல்லை; எம்.ஜி.ஆர்., அம்மாவின் விசுவாசி" என்று நீங்கள் காட்டும் போலி அனுதாபம் ஒரு மலிவான அரசியல் வித்தை. முன்னாள் முதல்வர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆகியோர் எனக்குக் கற்றுக்கொடுத்த தேசப்பற்று, ஆன்மிகம், மக்கள் தொண்டு ஆகிய நேர்மையான கொள்கைகளும், பாஜகவின் பாதையும் ஒன்றுதான். அவர்கள் எனக்குப் போதித்தது மக்கள் சேவையே தவிர, உங்களைப் போல திருமதி. சோனியா குடும்பத்தின் காலடியில் கிடக்கும் சுயநல அடிமை அரசியலை அல்ல!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும் மத்திய அரசையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? கச்சத்தீவைத் தாரைவார்த்ததும் சரி, 2004–2014 காங்கிரஸ்-திமுக ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் சரி, முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோதும் சரி, அதே முள்ளிவாய்க்காலில் பள்ளிச் சீருடையுடன் படுகொலை செய்யப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் எலும்புத் துகள்கள் இன்றும் அந்த மண்ணில்தான் புதைந்து கிடக்கின்றன... அன்றெல்லாம் வாய்மூடி மௌனம் காத்தவர்கள் நீங்கள்!

ஆனால், 2014-ல் பிரதமர் திரு. மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட்டன என்பதோடு, கைது செய்யப்படும் மீனவர்களை உடனடி ராஜீய நடவடிக்கைகள் மூலம் மீட்டு அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது. இத்தகைய வெளியுறவுத் துறையைக் கொச்சைப்படுத்துவது, காங்கிரஸின் கறைபடிந்த வரலாற்றுப் பாவங்களை மறைக்கும் மலிவான நாடகமே.

வாய்க்கு வாய் 'மதச்சார்பின்மை' பேசும் தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே... சட்டமன்றத்தின் மாண்பே எந்த மதத்தையும் முன்னிறுத்தாமல் நடுநிலையோடு இயங்குவதுதான். ஆனால், அங்கு சபாநாயகரும் சரி, நிதி அமைச்சரும் சரி, தொடர்ந்து பைபிள் வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி அந்த மாண்பை உடைத்து வருகிறார்களே! பைபிளைப் போலவே பகவத் கீதையிலும் திருக்குரானிலும் கூடத்தான் மனிதகுலத்திற்கான நற்போதனைகள் உள்ளன; அவற்றை ஏன் அவர்கள் மேற்கோள் காட்டுவதில்லை? அவரவருக்கு அவரவர் மதம் பெரிது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசு நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே முன்னிறுத்திவிட்டு, மற்ற மதங்களைப் புறக்கணிப்பது என்ன மாதிரியான மதச்சார்பின்மை? சட்டமன்றத்தில் அரங்கேறும் இந்த ஒருதலைப்பட்ச மதத் திருப்திப்படுத்தும் தவெக அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு, எங்களுக்கு நல்லிணக்கப் பாடம் எடுக்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.

புதிய தலைமைச் செயலகத்தால் மீனவ மக்களும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள் என்ற நியாயமான காரணங்களைச் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? இத்தனை நாட்களாக திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கணமே அந்தக் கேரக்டராகவே மாறிவிட்டீர்கள் தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே! அதானே, மக்கள் நலனுக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தான் எப்போதுமே சம்பந்தம் கிடையாதே!” என்று நயினார் நாகேந்திரனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com