வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் கலந்துகொண்டு, "நாம் ஆண்ட பரம்பரை" என்று பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாண, மாணவிகளுக்கான பாராட்டு விழாவில் வணிக வரித்து அமைச்சர் மூர்த்து கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், "நான் சொல்றேன், நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். படிச்சிருக்கீங்க, இப்போது நலு பேர், ரெண்டு பேர் செத்துப்போனால்கூட பெருசா இது பண்றான்.
ஆனால், சுதந்திரத்திற்காக இந்தச் சமுதாயத்தில் ஐந்தாயிரம், பத்தாயிரம் பேர் செத்திருக்காங்கிறதை நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அந்த வரலாற்றையெல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன். ஏன்னு சொன்னீங்கன்னா... அதுக்கு ஒரு வரலாறு இருக்கு, அது அழகர் கோயிலாக இருந்தாலும், திருமோகூர் கோயிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பில் கொள்ளையடித்துச் செல்லும்பொழுது இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் முன்னுக்கு நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.
இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்தான் உசிலம்பட்டி பக்கத்தில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுருக்கிறார்கள் என்றால், விவசாயத்துறையில், தொழில்துறையில் நம்மவர்கள் அன்று முன்னுக்கு இருந்த நிலையிலும்கூட படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது. ஆனால், இப்போதுதான் அரசு வேலை வாய்ப்புகளில் படிப்படியாக நீங்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது மனதார பாராட்டுகிறேன்" என்று பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி.