பேரா. நன்னன் மனைவியிடம் உரிமை தொகை வழங்கும் முதல்வர்
பேரா. நன்னன் மனைவியிடம் உரிமை தொகை வழங்கும் முதல்வர்

நன்னன் நூல்களுக்கு ரூ. 10 லட்சம் உரிமைத் தொகை!

மறைந்த பேராசிரியர் நன்னன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான உரிமைத் தொகையை, அவரின் மனைவியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஜூலை 30 தேதியன்று, நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பேராசிரியர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், பேராசிரியர் மா. நன்னன் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் பார்வதி அம்மாவிடம் நூலுரிமைத் தொகையான ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, பேராசிரியர் மா. நன்னனின் மகள் அவ்வை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார்.

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com