தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, புதுச்சேரியைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.