தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் தலா ரூ. 5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்க இருந்த நிலையில் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது. தொழில் முதலீடு செய்ய மட்டும் அல்ல, அன்பு, அறிவை பகிர்ந்து கொள்ளவும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ் மண்ணின் சிந்தனைகள், எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். வாசிப்பு மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் அறிவு தீ பரவ வேண்டும் என்று ஏராளமான முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். சென்னை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.
திமுக ஆட்சியில் 4ஆவது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது. மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம். தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும்.
பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழ், கன்னடா, தெலுங்கு, ஒடியா, மலையாளம், பெங்காலி படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும். ஒவ்வொரு மொழிக்கும் தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.