
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி வந்ததும் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். ஆனால் பெரிய அளவில் ஆட்சி மாற்றத்துடன் அதிரடி மாற்றங்களைச் செய்யாமல் புதிய ஆட்சியில் நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன.
முதலமைச்சர் முதல் கடைசி அமைச்சர்வரை அவரவர் துறையைப் பற்றி உள்வாங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதை, அவர்களே வெவ்வேறு வகைகளில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அரசுத் துறைகளில் முக்கியமான நிலைமாற்ற முடிவு எதையும் புதிய ஆட்சி மேற்கொள்ளாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில், கடந்த ஆட்சியில் 2025 நவம்பரில் உருவாக்கப்பட்ட பாடத்திட்ட கலைத்திட்ட வடிவமைப்புக் குழு சூழலியல் பேராசிரியர் சுல்தான் அகமது இசுமாயில் தலைமையில் செயல்பட்டுவந்தது. அந்தக் குழு உருவாக்கிய புதிய பாடத்திட்டப் புத்தகங்களை கடந்த மாதம் புதிய பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
அதே குழு தொடர்ந்து பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அரசுத் தரப்பிலிருந்து அந்தக் குழுவை மாற்றியமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வசதியாக இப்போதைய குழுவில் இருப்பவர்கள் விலகிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை அகமது சுல்தான் இசுமாயில் தன் சமூக ஊடகப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.