
எத்தனை ஷா வந்தாலும், கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122-வது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமையிடம் சமர்ப்பித்தனர்.
இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.