இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
இளம் தலைவர் ராகுல்காந்தி எஸ்ஐஆருக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, அரியானா பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்கவிடக் கூடாது. வரும் முன் காப்பது நமது கடமை. ஜனநாயகத்தைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருக்க வேண்டும்.“ என்று பேசினார்.