முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரே தேர்தல், தொகுதிப் பிரிப்பு: எதிர்த்து தமிழக அரசு பேரவையில் தீர்மானங்கள்!

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானங்களைக் கொண்டுவந்துள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கும் இரண்டு அரசினர் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவையில் முன்மொழிந்தார்.

அப்போது அவர் பேசியது:

“ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திலிருந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சதி செய்துள்ளனர். இதனை முறியடிக்க வேண்டும். இந்த இரண்டும் மக்களாட்சிக்கு எதிரானது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு எதிரானது. ஒரே தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்கும் சூழல் ஏற்படும். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்ய முடியும்? இதைவிட காமெடிக் கொள்கை வேறு இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலைகூட ஒரே கட்டமாக நடத்த முடியாத சூழல்தான் உள்ளது. உள்ளாட்சிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், அதற்கும் தேர்தல் நடத்தப்போவதாகக் கூறுவது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.

உள்ளாட்சித் தேர்தல் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தைச் சிதைக்கக்கூடியதாகும்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சூழ்ச்சி உள்ளது. இதை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மக்கள் தொகையின்படி தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்குப் பரிசாக அமையும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தொகை கணக்கின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதை தீவிரமாக மேற்கொள்ளும்வரை தொகுதிகளின் எண்ணிக்கை இப்படியே தொடர வேண்டும். மக்கள் தொகையைக் காரணம் காட்டி தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்து விட்டது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

தீர்மானம் 1

"2026 ஆம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பின்‌ அடிப்படையில்‌ மேற்கொள்ளப்படவிருக்கும்‌ தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக்‌ கைவிட வேண்டும்‌ என்றும்‌ தவிர்க்க இயலாத காரணங்களினால்‌ மக்கள்தொகையின்‌ அடிப்படையில்‌ சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின்‌ எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால்‌, 1971 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகையின்‌ அடிப்படையில்‌ தற்பொழுது மாநிலச்‌ சட்டமன்றங்களிலும்‌ நாடாளுமன்றத்தின்‌ இரு அவைகளிலும்‌ மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில்‌ தொகுதிகளின்‌ எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில்‌ தொடர்ந்து இருக்கும்‌ வகையில்‌ சட்டத்‌ திருத்தம்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள்‌ நலன்‌ கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும்‌ மேலாக பல்வேறு சமூகப்‌ பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும்‌ மக்கள்‌ நல்வாழ்வு திட்டங்களையும்‌ சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்‌ தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும்‌ இந்தப்‌ பேரவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

ஒரு நாடு ஒரு தேர்தல்'‌ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்‌; நடைமுறைக்குச்‌ சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்‌; அது இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தில்‌ வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்‌; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌, மாநிலச்‌ சட்டமன்றங்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள்‌ பல்வேறு காலகட்டங்களில்‌ மக்கள்‌ பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்‌; அதிகாரப்‌ பரவலாக்கல்‌ என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும்‌ 'ஒரு நாடு ஒரு தேர்தல்‌' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்‌ கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்‌ பேரவை வலியுறுத்துகிறது."

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com