வெங்காயத்தின் விலை உயர்ந்துவிட்ட நிலையில் ரேசன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு முடிவுசெய்துள்ளது.
உணவு - உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் இன்று இதை அறிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது:
“ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு உயர்வு, அதிக அளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரத்திலிருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 56 முதல் ரூ. 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான முறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு நகர்ப்பகுதியில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டக சாலைகள், அமுதம் அங்காடிகள், நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8,739 நியாயவிலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு வழங்கப்படும்.
தேவையின் அடிப்படையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறினார்.