பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பே தங்களுக்கு விருப்பமான தேதி, நேரத்தை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்கள், திருவிழா காலங்களில் பழனி கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் ரோப்கார் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ரூ.100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
கோவிலில் நடைபெறும் 6 கால பூஜையில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு வசதியும் சோதனை முறையில் தொடங்கப்பட்டு உள்ளது.
விரைவில் கோவிலில் தங்கும் வசதிக்கான முன்பதிவும் ஆன்லைனில் தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.