“2011ல் செய்த தவறுக்காக அனுபவிக்கிறார் ஓபிஎஸ்” – வைகோவின் பரபரப்பு குற்றச்சாட்டு!
“2011 தேர்தல் சீட் தொடர்பாக ஜெயலலிதாவிடம் தவறான தகவல்களை கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் வைகோ பேசியதாவது: “கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். 12 சீட்தான் என்றார்கள். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டால், எனக்கு மாலை 5 மணிக்கு முன்னரே தகவல் சொல்லிவிடுங்கள். மாலை மாவட்டச் செயலாளர் கூட்டம் இருக்கிறது கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன்; அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓபிஎஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று ‘அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார்’ என்று பொய்யைச் சொல்லிவிட்டார்.
பின் கேள்விப்பட்டேன். தினமணி வைத்தியநாதன் இதைச் சொன்னார். 15 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபாவும் கொடுப்பதென்று அவர் (ஜெயலலிதா) முடிவெடுத்துவிட்டார். நீங்கள் நேராகச் சென்று சந்தித்தால் இதை உறுதிப்படுத்துவார்கள் என்று சொல்லி என்னிடம் பேசுவதற்கு துக்ளக் சோவும், தினமணி வைத்தியநாதனும் படாதபாடு பட்டிருக்கிறார்கள். நான் செல்போனையெல்லாம் ஆஃப் செய்துவிட்ட இருக்கும் இடமே தெரியக்கூடாது என்று இருந்தேன். மாலைதான் தாயகத்திற்கு வந்தேன். ஓபிஎஸ் அழைப்பார் என்று செல்போனைக் கையிலேயே வைத்திருந்தேன். அவர் கூப்பிடவேயில்லை. அதன்பலனை இன்று ஓபிஎஸ் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்” என்று பேசிய வைகோ, விஜய்யும் விமர்சித்துப் பேசினார்.
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்.” என்றார்.
