தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

மிக்ஜம் புயல்: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க- தலைமைச் செயலாளர்!

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவிட்த்துள்ளது.

மிக்ஜம் புயலானது வடக்குத் திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை முற்பகலில் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் சுமார் 1,700 தீயணைப்பு ஊழியர்கள் பணியில் உள்ளனர். சென்னை 43 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாநகராட்சி, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் 24 மணி நேரமும் களப்பணியில் இருக்கின்றனர்.” என்று கூறினார்.

மேலும், ”அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம்.”எனக் கூறிய அவர்,

“தீவிர மழையின்போது, அதிகம் காற்று வீசும்போது மக்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது.” என்று கேட்டுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com