பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

10.5% தனி ஒதுக்கீடு: போராட்டத்தில் பா.ம.க. இறங்கும் - ராமதாஸ் சொல்கிறார்

வன்னியர் சாதி 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இனியும் இலவு காத்த கிளியாக பா.ம.க. இருக்கமுடியாது என்றும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு காட்டமாகக் கூறியுள்ளார்.

இன்றைய அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கும் அவர், சமூகநீதிக்கான போராட்டத்துக்காக தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

” வன்னிய இளைஞர்கள், 10.5 % இட ஒதுக்கீடு என்ன ஆனது என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. வன்னிய இளைஞர்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தியும் வைக்க முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். சமூகநீதி நாளான இன்று இதுகுறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்.” என்றும்,

”தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று, அதன் அடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு பிரிவிலும், அதில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது? அதை தவிர்த்து பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 விழுக்காட்டில் எந்தெந்த சமுதாயங்களுக்கு எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவும் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com