
கருணாநிதியின் கடைசிக் காலம் குறித்து சர்ச்சை காணொலி ஒன்று வெளியாகி, அதை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் மேடையில் பேச பரபரப்பு பிரச்னையாகியுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியுடன் இலக்கியரீதியாக அடிக்கடி பேசிப் பழகிய கவிஞர் வைரமுத்து தன்னுடைய விளக்கம் ஒன்றை கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார்.
அது:
“ கடைசிக் காலத்தில்
கலைஞர்
சிறைப்படுத்தப்பட்டிருந்தார்
என்ற அரசியல் கூற்று
உண்மைக்கு மாறானது
அதற்கு
நானும் ஒரு சாட்சி
கலைஞரின் உடல்நிலை
மருத்துவத்தின் கைகளுக்கு
மாறிவிட்டது
முதுமை - நோயுடைமை
தொண்டைத் துளை
பேச்சின்மை
மருந்துகளின் தாக்கம்
போன்ற காரணங்களுக்காக
மருத்துவர்களின் அறிவுரையைத்
தளபதி மு.க.ஸ்டாலின்
கவனமாகப் பின்பற்றினார்
நோய்த்தொற்றைத் தடுக்கவே
பார்வையாளர்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டனர்
அவர் ஆயுளை நீட்டிக்கவே
கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன
வாரம் ஒருமுறை
அல்லது இருமுறை
நான் கலைஞரைச்
சந்திக்கும் வாய்ப்பை
யாரும் தடுக்கவில்லை
மென்மையாய்;
மிக மென்மையாய்
அவர் கையாளப்பட்டார்
கலைஞர் இரண்டாம்
குழந்தை நிலையில் இருந்தார்
தொட்டில் என்பது
ஒரு குழந்தைக்குச்
சிறையாகிவிடாது
தந்தையைப் பிள்ளைபோல்
பாதுகாத்தார் தளபதி
தந்தையை அவர்
சிறையில் வைக்கவில்லை;
சிறகில் வைத்திருந்தார்
தமிழர்கள் அறிவார்களாக!” என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.