மதுரை எய்ம்ஸ் கட்டடம்- எல்/டி நிறுவனம் பூமிபூஜையுடன் தொடங்கியது!
ஐந்தாண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணியை பிரபல எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இன்று பூமி பூஜையுடன் அந்த நிறுவனம் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 33 மாதங்களில் கட்டுமானப் பணி முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த தோப்பூரில் 222 ஏக்கர் பரப்பில் பத்து தளங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, 2018ஆம் ஆண்டில் மைய அரசு ஒப்புதல் அளித்தது. அடுத்த ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் ஐந்து ஆண்டுகளாக கட்டுமானப் பணி தொடங்காமல் இழுத்தபடியே இருந்துவந்தது. இந்த மருத்துவமனையைக் கட்டுவதற்கு ஜப்பானின் கூட்டுறவு வங்கியான ஜெய்காவிடம் கடன் வாங்கவேண்டியிருந்ததே தாமதத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதாவது, மொத்த செலவு 1977.8 கோடி ரூபாயில் 82 சதவீதம் ஜெய்கா வழங்கும்; மீதமுள்ள 18 சதவீதத் தொகையை மட்டுமே மைய அரசு வழங்கும் எனக் கூறப்பட்டது.
இந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சுவர்கூட அண்மையில்தான் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை எய்ம்ஸ் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கவுள்ள வேளையில் திடீரென இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்டுமானப் பணியைத் தொடங்கியிருப்பதாகக் கூறினார்.