பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கும் பிரதமர்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் பகுதிக்கு சென்று சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

"பிரதமர் மோடி இன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ஆளுநர் மாளிகை வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பிரதமரின் வருகையையொட்டி விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்படும்.

அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.

வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட் (டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com