கருணாநிதி- எம்.ஜி.ஆர். பிரிவு: ரஜினி கேட்ட ரகசிய ஆடியோ!
தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க. எனும் தனிக் கட்சியை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தொடங்கியபோது, எம்.ஜி.ஆருக்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நடிகர் இரஜினிகாந்த் கேட்டுள்ளார். இதுகுறித்து இரஜினி இன்று முரசொலி நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையிலிருந்து... :
”பல நேரங்களில் நான் கலைருடன் நெருங்கிப் பழகிஇருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களின் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் அவர்கள் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.

எனக்கு தெரிந்த ஒருவர். அவர் பெயர் கூற இயலாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்.அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவர்க்கும் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நடந்த தொலைப்பேசி உரையாடல் ஆகும்.
அதில் எஸ்.எஸ்.ஆர். “அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும். கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்” என்று கூறுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். “இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே” என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.
அதன் பின். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள்.
அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்? எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ?” என்று இரஜினிகாந்த் முரசொலி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.