
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று தம்பிதுரை, அன்புமணி மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 5) கடைசி நாளாகும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் மு. தம்பிதுரையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தியிடம், தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இருவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கான வேட்பாளர்களும் இன்று தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.