பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

வாக்கு எண்ணுமிடங்களில் கூடுதல் மின்விசிறிகள் வேண்டும்: இராமதாஸ்

நேற்று ஒரே நாளில் நாடளவில் 61 பேர் வெப்பத்தாக்குதலால் உயிரிழந்துள்ள நிலையில், இனியாவது இப்படிப்பட்ட கோடை காலத்தில் தேர்தல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். 

”வெப்பவாத பாதிப்பால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று உயிரிழந்த  17 பேரில்  15 பேரும், பிகாரில் உயிரிழந்த 14  பேரில் 10 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆவர். ஒதிஷா, ஹரியானாவிலும் கணிசமான எண்ணிக்கையில் வெப்பவாதத்தால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் வீசிய நேரத்தில் வெளியில் நடமாடியதால்  நீரிழப்பு ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.” என அறிக்கையில் விவரித்துள்ள அவர், 

”கடுமையான  வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ,  ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ  தேர்தலை நடத்த ஆணையம்  திட்டமிட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். 

”தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் வாட்டி வரும் வேளையில் தான் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் போதிய எண்ணிக்கையில் மின்விசிறிகள் அமைக்கப்படவில்லை.  ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ண  குறைந்தபட்சம்  14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 7 மின்விசிறிகள்  மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு தொகுதியிலும்  30  வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வைத்துக் கொண்டால், பேரவைத் தொகுதிவாரியாக  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேசைகளில் 420 முகவர்களும்,  30க்கும் மேற்பட்ட பணியாளர்களும்  இருப்பார்கள். அவர்களுக்கு 7 மின்விசிறிகள் போதுமானவை அல்ல.

”வாக்கு எண்ணும் மையங்களில் காற்றோட்டமும், இதமான சூழலும் இல்லாவிட்டால்  பணியாளர்களாலும், முகவர்களாலும்  சரியாக பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு  வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும்  அமருவதற்கு  இருக்கைகளை அமைக்கவும்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.” என்றும் இராமதாசு கூறியிருக்கிறார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com