தமிழக மீனவர்களுக்கு சிறை: கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

தமிழக மீனவர்களுக்கு சிறை: கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களின் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகு ஓட்டுநர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இரண்டு விசைப் படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில், படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களுடைய படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com