முதல்வரிடம் விருது பெறும் முகமது ஜூபைர்
முதல்வரிடம் விருது பெறும் முகமது ஜூபைர்

குடியரசு தின விழா: கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது பெற்ற முகமது ஜூபைர்!

தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது ஜூபைருக்கு 2024ஆம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இதில் முக்கியமானது 'கோட்டை அமீர் மத நல்லிணக்க' விருது.

மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000/-க்கான கேட்புக் காசோலையும் சான்றிதழும் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விருது ஆல்ட் நியூஸின் முகமது ஜூபைருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. போலி செய்திகளை அம்பலப்படுத்துவதில் முகமது ஜுபைர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:

"கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபைர், மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். முகமது ஜூபைர் ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.

அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தாக்கப்படுகிறார்கள் ஊடகங்களில் சமூக வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில்

வெளியிடப்பட்ட காணொளிகளில் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது ஆல்ட் நியூஸ் இணையதளம் மூலம் தெரியப்படுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com