சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை! – உயர்நீதிமன்றம்

ஜாதி, மதமற்றவர் எனும் சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜாதி, மதமற்றவா் என்ற சான்றிதழ் வழங்கக் கோரி திருப்பத்தூா் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனக்கு ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஜாதி, மதமற்றவா் என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவா்களுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜாதி, மதமற்றவா் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. அதேவேளையில் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்னைகளும் ஏற்படும். குறிப்பாக, சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், அரசு உத்தரவுப்படி, கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில் ஜாதி - மதம் விவரம் கோரும் இடத்தை பூா்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது . ஜாதி, மதமற்றவா் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவா்களுக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com