
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான நிதியுதவி ரூ.5,000 ஒரே தவணையில் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்திர நிதியுதவி திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ. 2500 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி துணைநிலை ஆளுநரை சந்தித்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிதியுதவியை முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கான தொகையான ரூ.5,000-ஐ ஒரே தவணையில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி பெண்கள் தங்களின் தேவைகளுக்காக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 63,000 குடும்பத் தலைவிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது