ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணின் மகள்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே இருந்த நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்தான் சிறிய மாறுதலுடன் மண்ணின் மகள் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற, கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் இருப்பவர்கள் முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை அடைய 'அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு' ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ்,
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழங்குடியினர் குடியிருப்புகளில்,
வீடுகள்,
சாலைகள்,
குடிநீர்,
தெரு விளக்குகள்
வாழ்வாதாரத் திட்டங்கள்,
சுகாதாரத் கட்டமைப்புகள்,
கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள்,
பள்ளி, விடுதி மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த 'ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்' மூலமாக ரூ. 250 கோடியில் செயல்படுத்தப்படும்.
மேலும், தமிழின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ரூ. 42 கோடியில், தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.