
நா.த.க. தலைவர் சீமான் போட்டியிடும் காரைக்குடியில் அவருக்கு ஓட்டும் இல்லை, வீடும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். அதற்கு சீமான் இன்று பதில் அளித்துள்ளார்.
முதலில் கார்த்திக்கு என் தம்பி, தங்கைகள் பதில் சொல்வார்கள்; அவரின் அப்பா சிதம்பரம் பேசட்டும்; நான் பேசுகிறேன் எனக் கூறிய சீமான், பின்னர் பதிலளிக்கத் தொடங்கினார்.
“இராகுல்காந்தி வயநாட்டில் போய் போட்டியிட்டார், அவருக்கு கேரளத்தில் ஓட்டும் வீடும் இருந்ததா? அவருடைய தங்கை போய் போட்டியிட்டார்...அவருக்கு வீடும் ஓட்டும் இருந்தது. இப்போது மேலூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தியிருக்கிறீர்களே.. அவருக்கு அங்கு ஓட்டும் வீடும் இருக்கிறதா? உங்கப்பா வடமாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்டார். அங்கு அவருக்கு வீடும் ஓட்டும் இருந்ததா? ஓட்டும் வீடும் இருந்தால்தான் போட்டியிடவேண்டும் எனும் நீங்கள்தான் இந்தியப் பற்றைப் பேசுகிறீர்கள். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஒரே வரி சிரங்கு சொரியெல்லாம் கொண்டுவந்ததெல்லாம் நீங்கள்தானே? பயம்...பயம்... அந்த நடுக்கம் இருக்கவேண்டும்! தொகுதியில் வந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்.” என்று சீமான் கூறினார்.