
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் ஒருவரை ஒருமையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்பினார். இதனால் திடீரென ஆவேசம் அடைந்த சீமான், எழுந்து நின்று, ''உனக்கு என்ன தம்பி பிரச்சனை...? ஏய்.. அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்கணுமா? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்கணுமா? உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. இங்கே தள்ளி வா'' என்றார்.
தொடர்ந்து கோபம் அடங்காமல் பேசிய சீமான், ''இன்றில்லை உன்னை ரொம்ப நாளாக பார்க்கிறேன். உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துள்ளது. கேள்வியை கேள்வியாக கேளு'' என்றார். உடனே அந்த செய்தியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட ஆத்திரம் அடங்காத சீமான், ''ஏய்.. நீ முதலில் மரியாதையா கேள்வி கேளுடா. போடா.. டேய்.. ஒரு மைக்கை தூக்கி கொண்டும், கேமரா எடுத்துக் கொண்டும் வந்தால் நீ என்ன பெரிய வெங்காயமா? ஆளையும் முகரையும் பாரு. போடா'' என்று கூறியதால் அங்கு சலசலப்பு நிலவியது.
அந்த செய்தியாளர் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக திமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சீமான் டென்ஷன் ஆனதாக கூறப்படுகிறது.
அண்மை காலமாக அரசியல்வாதிகள் செய்தியாளர்களிடம் கோபப்பட்டு வாக்குவாதம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் ஒருவரிடம் சீறிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது சீமானும் செய்தியாளரை ஒருமையில் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.