தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா
தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா

கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டரில் மீட்பு, உணவும் விநியோகம்- சிவ்தாஸ் மீனா

அதிகன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நிலைமை சரியாக இன்னும் ஓரிரு நாள்கள் ஆகும் என்று தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

குமரிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக அதி கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரங்கள், கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், போக்குவரத்தும் பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மழையின் அளவு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.

மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:

”தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 6 விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 550 வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்ததும் நிலைமை சீராகும். ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தில் இருந்து கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்குச் செல்கின்றன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சென்னையில் இருந்து 100 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com