மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி ராமையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தை வேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் உட்பட 14 பேர் கடந்த 3 ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஜெகதாப்பட்டினம் கடலோரம் அருகில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, படகு பழுதடைந்துள்ளது. பழுதடைந்த படகை சீர்படுத்தி கொண்டு, 08.11.2025 ஆம் தேதி மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளனர்.
கடலுக்குள் சென்ற படகு மீண்டும் பழுதடைந்து தமிழக எல்லையில் தத்தளித்து நின்றுள்ளது. இந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்து, இலங்கைக்கு கொண்டுசென்றனர்.
அவர்களை விடுவிக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்,
“இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வதும், தாக்குதுவதும், அவர் வசம் இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்வது, பறிமுதல் செய்த பொருட்கள் இலங்கைக்கு சொந்தமானது என அபகரித்துக் கொள்வதுமான அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், மீனவர் அமைப்புகளும் கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து வற்புறுத்தி வரும் போதும், ஒன்றிய அரசும், அயலுறவுத்துறை அமைச்சகமும் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்கிறது. ஒன்றிய அரசு அலட்சியப் போக்கை கைவிட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்து, கொண்டு செல்லப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை விடுவித்து கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.