தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்பொன் பயன்படுத்தினால் 29 நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றை, டிரைவர் ஒருவர் ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மறு கையில் பஸ்சை ஓட்டியும் சென்றிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் நேற்றைய தினம் வெளியாகி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது. போக்குவரத்துத் துறையின் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றதையடுத்து, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில், ஒரு கையில் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணி மனையை சேர்ந்த டிரைவர் கனகராஜ் என்பது தெரியவந்தது. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்றபோது செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டியதும் உறுதியானது. இதனையடுத்து கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.