பா.ம.க. நிறுவனர் இராமதாசு குடியிருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி பொருத்தப்பட்டதாக அவரே அதிர்ச்சிப் புகார் அளித்திந்தார். அவரின் மகன் அன்புமணி கோஷ்டியினர் உடனே இதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து இராமதாசு தரப்பிலும் காவல்துறையில் புகார் தருவது குறித்து யோசிக்கப்பட்டது.
பின்னர், அரசியலாக இது ஒரு பிரச்னையாக மாறியதும், காவல்துறையும் விசாரணையில் இறங்கியது.
குறிப்பிட்ட ஒட்டுக்கேட்புக் கருவிகளை விசாரணைக்காக ஒப்படைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.
அதன்படி, பா.ம.க. இராமதாசு அணியின் தலைமைநிலையச் செயலாளர் அன்பழகன் முதலிய நிர்வாகிகள் இன்று விழுப்புரம், கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்க முடிவுசெய்வதாகத் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், ”இந்தக் கருவியில் லைக்கா நிறுவனத்தின் சிம் கார்டு உள்ளது. இதை யார், எதற்காக வைத்தார்கள், யார்மூலம் ஒட்டு கேட்கப்பட்டது என்பதை சைபர் கிரைம் காவல்துறையினரும் கிளியனூர் காவல்நிலையத்தினரும் விசாரணை நடத்திவருகின்றனர். எங்களையும் இராமதாசையும் விசாரித்தார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கருவியை இப்போது ஒப்படைக்கிறோம்.” என்று கூறினார்.