
தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 26ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (மார்ச் 23), நாளை மறுதினமும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 25, 26 தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27, 28 தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 6 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 4 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.” இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.