
‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திவாலானவர் என்று அறிவிக்கப்பட்ட மறைந்த தொழிலபதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கியிருந்தார். தற்போது அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என்ற நிலை இருப்பதால் அவரது சொத்துகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். ஞானவேல்ராஜா கடன் தொகை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தாக்கல் செய்திருந்தார். கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் ஞானவேல்ராஜா கடன் தொகையை செலுத்தாததால் நீதிமன்றம் தடையை நீட்டித்து தீர்ப்பளித்தது.
கடனை திரும்ப செலுத்தும் வரை 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நாடியிருந்தது.
இந்நிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.