முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

“இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது வேதனையை அளிக்கிறது.

நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 13இல் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை கைது செய்ததுடன், அவர்களது விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களது விசைப் படகுகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மூன்று நாள்களில் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இலங்கைக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பாக இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தைப் பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com